Friday, April 22, 2011

நம் பதிவுகளை பேஸ்புக்கில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

                                   நம்முடைய பதிவுகளை திரட்டிகளின் மூலம் பலருக்கும் அறிமுகபடுத்துகிறோம்,இப்போது பேஸ்புக் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம் ஆனால் பேஸ்புக்கில் நாம் ஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
                                   ஆனால் இப்போது நம்முடைய பதிவுகளை நம்முடைய வலைபகுதியில் பதிவிட்ட உடனே  பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால்,மிகவும் எழிதான முறைகளை கையாண்டால் போதும்.

1.முதலில் நம்முடைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2.அதில் நம்முடைய புகைப்படத்தின் கீழ் உள்ள Notes-யை திறந்து கொள்ளுங்கள்.

3.அதில் "WRITE A NOTE" யை கிளிக் செய்யுங்கள்.

4.அந்த பக்கத்தில் ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி அதை "SAVE DRAFT" -கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
(இந்த வாசகத்தை பின்னர் அழித்து கொள்ளலாம்)

5.வாசகங்களை சேமித்த பின்னர் கீழே "EDIT IMPORT SETTINGS"-யை கிளிக் செய்யுங்கள்.இப்போது நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டிய புதிய பக்கம் திறக்க படும்.

6.அந்த புதிய பக்கத்தில் நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்து "START IMPORTING" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்வு துவங்கி விடும்.

7.அடுத்த படியாக உறுதிபடுத்துவதற்காக "CONFIRM IMPORT" என்பதனை கிளிக் செய்யுங்கள்.

8.அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்ந்து விடும்,நம்முடைய அடுத்த பதிவுகள் நேரடியாக பேஸ்புக்கில் பகிர படும்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்....
பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.... 
 

Friday, April 1, 2011

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

இந்த ஐந்து வழிமுறைகளையும் கையாண்டால் ஓரளவிற்கு நாம் ஏமாறுவதை நாமே தவிர்க்கலாம்.

Friday, March 25, 2011

விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:


ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம்.

இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது. டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.


2.விண்டோக்களைக் கையாளுதல்:


விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது.

செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும்.

பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம்.

விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.

இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.


3. பல மானிட்டர் செயல்பாடு:


ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.


4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:

விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும்.

இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.


5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:

நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம்.

விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும்.

மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.


6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:


என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.

இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.


7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:

வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம்.

இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது. அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம்.

அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

                   துன்பம் தொலைந்து இன்பம் வந்தால் மனதில் நிம்மதி,ஆனால் இன்பம் போய் துன்பம் வந்தால் மனதில் சஞ்சலம்...

                  2010 என்னும் ஒரு வருடத்தை நாம் கடந்து,2011 என்னும் புத்தாண்டுக்குள் வந்திருக்கிறோம்.ஆனால் சில பேர்க்கு இது இனிய வருடமாக அமையும்.சிலருக்கு இது துன்பமான வருடமாக அமையும்.அனால் துன்பத்தை நினைத்து  துவண்டு போகாமல்.அதை எதிர்த்து நின்று வெற்றியை கண்டடைய எனது வாழ்த்துக்கள்.

                எல்லோரையும் வாழ்த்தும் போது,நமக்கான வாழ்த்து முறையாக நம்மிடம்  வந்து சேரும்.இந்த புத்தாண்டிலே அனைவரையும் வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

               எந்த விதமான துன்பமும்,வருத்தங்களும் இல்லாமல் இந்த ஆண்டு  சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவன் நாமத்தினால் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Friday, December 31, 2010

மதவாதிகளின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை...

                            எத்தனை தலைவர்கள் மாறினாலும்,எத்தனை ஜன்மம் எடுத்தாலும்,மாறாத ஒன்றாக இருக்கிறது இந்த மத பிரச்சனை.மனிதன் மாறுகிறான்,ஆனால் மதவாதிகள் என்னும் மிருகங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்கள்.
                           இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள்  மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
                           கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான கொற்றிகோடு என்னும் கிராமத்தில்,C.S.I தேவாலயம் அமைந்துள்ளது.இந்த திருச்சபைக்கு பல கிளை சபைகளும் உண்டு.அதில் ஒன்றான எரிச்சமாமூடுவிளை  ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிதாக கட்டி துவங்க பட்டது.நாள் போக்கில் அந்த சபையின் குடும்பத்தினர் அதிகரித்து புதிய ஆலயம்   கட்டுவதற்காக  மேற் கூரையை பிரித்தனர்.
                           அப்போது தான்  பிரச்சனை ஆரம்பித்தது.என்னவென்றால்,வேறு மத தொழுகை இடம் இருப்பதற்கு  அருகாமையில் இன்னொரு மதத்தின் தொழுகை இடத்தை அமைக்க விட மாட்டோம் என்று மதவாதிகள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிக்காட்டினார்கள்.இதன் விழைவாக போலீஸ் ஸ்டேசனில் வழக்கு தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

                            இப்படியாக பல ஆண்டுகள் பிரச்சனை நடந்து கொண்டிருந்தத வேளையில்,நேற்று முன்தினம் ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.இதை அடுத்து சபை உறுப்பினர்கள் ஆலயத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வேளையில் மதவாதிகள் எதிர்ப்பை மீண்டும் வெளிக்காட்டி,ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்களை கற்களால் தாக்கினார்கள்.

                            இதனால் அந்த பகுதியில் பெரிய மத பிரச்சனை கிளம்பியது.சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கொற்றிகோடு பகுதியில் உள்ள அனைத்து தரத்து கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து ஆலயத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் வந்து அப்பகுதியை முற்றுகையிட்டார்.

                            இப்படியாக பல போராட்டத்தின் மத்தியில் கலெக்டரிடம் இருந்து ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.

                           ஆணை கிடைத்த உடன் அங்கு குவிந்திருந்த  போலீஸ் காரர்களின் பாதுகாப்பில் ஆலயம் கட்டப்பட்டது.

                          ஒரு ஆலயம் கட்டுவதற்கு இவ்வளவு  பிரச்சனையா?இது எனது ஊரில் நடந்த உண்மை.இதே போல் பல  ஊர்களில் மதவாதிகளின் அட்டகாசம் தொடர்கிறது.இவர்களுக்கு ஒரு முடிவு வந்தால் தான்,உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக  வாழ முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.

                இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.

              இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை போல் இந்த கட்டிடம் காட்சி அழிக்கிறது.துபாய் முஸ்லிம் நாடு என்பதால் வேறு மதத்தை சுட்டி காட்டும் இந்த கட்டிடத்தை அகற்றுமாறு சவுதி அரசர் "அப்துல்லா" கேட்டு கொண்டுள்ளார்.

       
             அதற்க்கு  துபாய் அரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆகவே துபாயில் உள்ள வாகனங்கள் சவுதி செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை கொண்டு இடித்தும்,தகராறு செய்தும் வந்தார்கள்.ஏனென்றால்,துபாய் வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இருப்பதினால்.

           இத்தகைய பிரச்சனைகள் கிளம்பிய உடன் இந்த கட்டிடத்தின் புகைப்படத்தை உடனே நீக்குமாறு துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.இருப்பினும் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கும்,வேறு இடம் வாங்குவதற்கும்,அதில் வேறு ஹோட்டல் அமைப்பதற்கும் எவ்வளவு செலவு ஆகுமோ எல்லாவற்றையும் தானே ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த கட்டிடத்தை அப்புற படுத்துங்கள் என்று,சவுதி அரசர் கேட்க, துபாய் அரசரோ முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளாராம்.


           இன்னும்  இந்த பிரச்னை ஓயாமல் நடந்து கொண்டு இருக்கிறது.பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் அனைவருக்கும் நல்லது.இல்லையென்றால் இதன் காரணமாக மத கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


பணி சுமை காரணமாக புதிய பதிவுகள் இடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வாரம் ஒரு பதிவு போடலாம் என ஆசை படுகிறேன்.
துபாயில்  என் பயணம் தொடர உங்களுடைய வாழ்த்துக்கள் அவசியம்...
மறக்காமல் உங்கள் கருத்துகளை எழுதி செல்லுங்கள்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting